Thursday, January 21, 2016

நான் ஒரு நாடகக்காரன் - 4

இப்போது ஹாலுக்குள் இருக்கும் மூவரைப் பற்றியும் ஒரு சித்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், இது போதாது. கிடைத்தவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போதும் அவர்களுடைய இறுக்கம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் அவர்களை வெளிப்படுத்த வைப்பது கடினம் என்பதால், அவர்களை மேலும் லகுவாக்க வேண்டும்.

இன்று …. வரையறுக்கப்பட்ட எந்தவொரு பாடத்திட்டத்துடனும் நான் வரவில்லை. எனவே, அவர்களின் மனதை லகுவாக்க என்ன செய்யலாம் என்ற யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது.

‘ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்க’ – நான்.

எல்லா பயிற்சி வகுப்புகளிலும் நடப்பது போலவே நடந்தது. முதலில் … ‘பாட்டா?’ ‘எனக்குப் பாடவராது’ ‘ரெண்டு வரிதான் தெரியும்’ ‘நான் பாடுனதே கெடயாது’ என்றெல்லாம் பிகு பண்ணினார்கள்.

‘நான் உங்கள கச்சேரி பண்ணச்சொல்லல. தெரிஞ்ச அளவுக்கு ரெண்டு ரெண்டு வரி பாடினாக்கூடப் போதும்.’ என்றதும், சற்று தைரியம் வந்து 
பாட ஆரம்பித்தார்கள்.
60 வயது ஆண் ‘எனக்கு தமிழ் பாட்டு தெரியாது.’ என்று, இந்திப் பாடல்களாகப் பாடினார்.

கொஞ்சம் கொஞ்சமாக அது திட்டமிடாமலே அந்தாக்ஷரி ஆயிற்று. ‘நல்லது நடந்தா சரிதான்’ என நானும் விட்டுவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் விலகி உற்சாகம் பரவத் தொடங்கியது. 60 வயது ஆண் ‘ஆராதனா’ ‘கட்டிபடாங்’ ‘சில்சிலா’ ‘மேரா நாம் ஜோக்கர்’ என்று பழைய இந்திப் பாடல்களாக பாடித் தள்ளினார். நவநாகரீகமாக இருந்த அந்தப் பெண்ணோ லேட்டஸ்ட் குத்துப்பாட்டுகளாக பாடினார். 40 வயது ஆண் எம்.ஜி.ஆர் பாடல்களாக பாடினார். 60 வயது ஆணும் அந்தப் பெண்ணும் ஓரளவுக்கு நன்றாகப் பாடினார்கள். 40 வயது ஆண் தாளம் சுதி என எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாடினார். ஆனால், அவர்தான் நிறைய பாடல்கள் பாடினார். அவருக்குத் தெரிந்த, தெரியாத பாடல்களை எல்லாம் பாடினார்.

மற்ற இருவரும் தங்களுக்கு தெரிந்ததைப் பாட, அவரோ தனக்கு தெரியாத பாடல்களைக்கூட பாடினார். பாடினார். பாடிக் கொண்டேயிருந்தார். வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்த மாணவன் பெற்றோர்களால் மிரட்டப்பட்டு, முதல் ரேங்குக்காக கடும் பிரயத்தனப்படுவது போல் அது இருந்தது. தன்னை ஸ்தாபித்தே ஆகவேண்டும் என்ற வெறியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், நானோ அவரது மனதை வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது…  தன்னால் நன்றாக பாடமுடியாத தோல்வியில் துவண்டு கிடந்தது. அது அவரை இன்னும் வெறி கொள்ளச் செய்தது. அந்த ஹால் முழுவதும் சுதியற்ற, தாளம் குலைந்து போன எம்.ஜி.ஆர் பாடல்களால் நிரம்பிக் கிடந்தது. அவரோ நெருப்பாக கனிந்து கொண்டிருந்தார்.
அவரது இந்த இயல்பின் பிண்ணனியில் நான் சென்ற அத்தியாயத்தில் கூறியிருந்தவாறு ஒரு பெரிய மர்ம முடிச்சு கொண்ட ரகசியம் இருக்கத்தான் செய்தது.

அவரிடம் மட்டுமல்ல … மற்ற இருவரிடமும்கூட சில ரகசியங்கள் ஒளிந்து கிடந்தது நன்றாகவே தெரிந்தது.

இது மற்றவர் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் என தவறாக நினைக்காதீர்கள். பயிற்சியில் பங்கு கொள்பவர்களின் ரகசியங்கள் அறிந்து கொள்வது, அவர்களைப் பயிற்றுவிக்கும் முறைகளை தீர்மானிக்கவும் கையாளவும் எளிதாக இருக்கும்.

இது …. பயிற்சிகளின்போது அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது மற்றும் முக உணர்வு வெளிப்பாடுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்வது.

மற்றொரு முறையும் உண்டு. அவர்களிடம் நேரடியாகப் பேசுவதன் மூலம் அவர்களிடமிருந்து கேள்விகள் கேட்டு அவர்களைப் பற்றிய அந்தரங்கங்களை வெளியிடச் செய்வது. இது அவர்களது மனத்தடையை உடைத்து வெளிவர உதவியாக இருக்கும். ஒரு நடிகருக்கு மிக முக்கியமானது … மனத்தடை உடைத்தல். நான் எனது பயிற்சிப் பட்டறைகளில் மிகு முக்கியத்துவம் கொடுப்பது நடிகர்களின் மனத்தடை உடைப்பதற்குத்தான். அதுவே அவர்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துவிடும்.

அந்தரங்கங்களை வெளிக் கொணரும் இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட ஒரு கவுன்சிலிங் போன்றே நடைபெறும். தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் பேசியாக வேண்டும்.. மெதுமெதுவாக அவர்களைப் பேசவிட்டு, பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சி ஒரு நடிகருக்கே நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் ஆகும். சிலருக்கு ஒருநாள் கூட ஆகும். அதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். இதில் … நான் பேசுவது மிகக் குறைவாகவே இருக்கும். நடிகர்களை நிறையப் பேசவிட வேண்டும். எனது பொறுப்பு சிறுசிறு கேள்விகள் கேட்டு அவர்களை தூண்டிவிடுவது மட்டுமே. சிலர் நேரடியாக பதில் கூறுவார்கள். இவர்களது session சீக்கிரம் முடிந்துவிடும். சிலர் சுற்றிச் சுற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், பதில் சொல்லமாட்டார்கள். இவர்களிடம் சின்னச்சின்ன துணைக் கேள்விகள் கேட்டு, பதிலை வரவழைக்க வேண்டும். அவர்கள் சுற்றிவளைத்துப் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். கேட்ட அந்தரங்க விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. மூடி வைத்திருந்த அந்தரங்கங்களை வெளிக் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் மனத்தடை உடைப்பது மட்டுமே நோக்கம்.

இங்கு நான் அப்படி பிரத்தியேகமான எந்தப் பயிற்சியையும் கடைப்பிடிக்காமலே கண்டறிந்த ரகசியங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். உடனே, அந்த ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நிமிர்ந்து அமர்வீர்களேயானால், மன்னிக்கவும் …. முன்பு போலவே நீங்கள் தளர்வாக அமர்ந்து கொள்ளுங்கள். நான் அந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. அது குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் இடையிலான ரகசியம். அதை பரகசியமாக்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை.

ஆனால், அந்த ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் எனது பணியை கடினமாக்கும்  வல்லமை கொண்டவை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். மூன்றே பேர்தான் என்றாலும் மறுநாள் வகுப்பிற்கு வருமுன் நான் நன்றாக தயார்படுத்திக் கொண்டுதான் வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளோடிக் கொண்டிருந்தது.
மட்டுமல்ல; மறுநாள் புதிதாக ஒரு பெண்மணியும் வகுப்பில் கலந்து கொள்வார். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள பிரத்தியேகமாக நேரம் ஒதுக்க முடியாது. எனவே, மறுநாள் பயிற்சி தொடங்கும் முன்பே அவரைப் பற்றி அவரையே விரிவாகப் பேசவிட்டு, ஓரளவுக்காவது அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்பு பயிற்சிகளைத் தொடரலாம் என்று திட்டமிட்டேன். அதற்கேற்றாற் போலவே பாடத்திட்டங்களையும் வகுத்துக் கொண்டேன்.

மறுநாளிலிருந்து பயிற்சிகள் இயக்குநருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் என்று சொன்னார்கள்.

சென்றேன். நேற்று வந்த மூவரும் காத்திருந்தார்கள். புதிதாக வரப்போகும் பெண்மணி சற்று தாமதமாகத்தான் வருவார் என்று ஒருங்கிணைப்பாளர் தகவல் தெரிவித்து, என் திட்டத்தை முதலிலேயே காலி பண்ணினாரென்றால், அந்தப் பெண்மணி வந்தபின் நடந்தவை நான் வகுத்த திட்டத்தை தவிடுபொடியாக்கின.  

     - யதார்த்தன் இளஞ்சேரன்





No comments:

Post a Comment